

கொழும்பு,
இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு போன்றவற்றால் நாடு நிலைகுலைந்திருக்கும் நிலையில், அங்கு நடைபெறும் தற்போதைய தேர்தல் உலக அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.
இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். எனினும் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 1.59 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக நாடு முழுவதும் 12,845 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இலங்கை வரலாற்றில் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.
இதைப்போல 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால், அவர்களின் பெயர்களுடன் 26 அங்குலத்தில் நீண்ட வாக்குச்சீட்டு தயாரிக்கப்பட்டதும் இதுவே முதல் முறையாகும். தேர்தல் பணிகளில் 4 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு பணிகளுக்கு 60 ஆயிரம் போலீசார் களத்தில் இறங்கினர். மேலும் 8 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரும் பயன்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது.
இந்த தேர்தலில் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக வடமேற்கு பகுதியில் ஒட்டு போடுவதற்காக சென்ற வாக்காளர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர்.