இலங்கை அதிபர் தேர்தலில் நமல் ராஜபக்சே போட்டி

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டியிட உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

இலங்கையில் வருகிற செப்டம்பர் 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது. அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதற்கிடையே ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து சில நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே (வயது 38) இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அக்கட்சி வேட்பாளருக்கு தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார்.

நமல் ராஜபக்சே முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார். லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பயின்ற அவர், 2010 முதல் மூன்று முறை அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

முன்னதாக இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com