நேபாளத்தின் புதிய பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து

35 வயதான பாலேந்திர ஷா, நேபாள நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நேபாளத்தின் புதிய பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் சென்றது. இதையடுத்து பிரதமர் பதவியை கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டை நிர்வகிக்க கடந்த செப்டம்பர் மாதம் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார். அவர் சில மாதங்களாக நேபாளத்தின் இடைக்கால பிரதமராக செயல்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து புதிய அரசை தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற தேர்தல் கடந்த மார்ச் 5-ந்தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியை சேர்ந்த பாலேந்திர ஷா, நேபாள நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார். நேபாள ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பகல் 12.34 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. 35 வயதான பாலேந்திர ஷா, நேபாள நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நேபாள பிரதமராக பதவியேற்றுள்ள பாலேந்திர ஷாவுக்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றுள்ள பாலேந்திர ஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் பிரதமராக பதவியேற்றிருப்பது, நேபாள மக்கள் உங்கள் தலைமை மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

நமது இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காகவும், இந்தியா-நேபாளம் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com