

கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆராய்வதற்காக
அங்கிருந்து பாறை மற்றும் மண் துகள்களை சேகரிக்கும் பணியில் பெர்சவரன்ஸ் ரோவர் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் பாறை துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள 7 அடி நீளமுள்ள ரோபோ கையில் தரையில் துளையிடுவதற்கான கருவி மற்றும் மாதிரிகளை எடுப்பதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எடுக்கப்பட்ட மாதிரிகளை சேமித்து வைக்க 43 டைட்டானியம் குழாய்களும் உள்ளன. அதன்படி பெர்சவரன்ஸ் ரோவர் மாதிரிகளை சேகரிக்கும் தனது முதல் முயற்சியில் தரையில் வெற்றிகரமாக துளையிட்டது. ஆனால் அதிலிருந்து பாறைகளை எடுத்து குழாயில் அடைத்து மூடுவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது. பெர்சவரன்ஸ் ரோவரின் நிலைமையை மதிப்பீடு செய்வதற்கும் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு நாசாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.