சுனிதா வில்லியம்சை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க டிராகன் விண்கலம் புறப்பட்டது.
சுனிதா வில்லியம்சை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்
Published on

வாஷிங்டன்,

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டது. இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டபோதும் இருவரையும் ஸ்டார் லைனர் விண்கலத்திலேயே பூமிக்கு அழைத்து வரவேண்டாம் என நாசா முடிவெடுத்தது.

அதன்படி, விண்வெளி வீரர்கள் இல்லாமல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கடந்த 6ம் தேதி மாலை 6 மணியளவில் ஸ்டார் லைனர் விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது. சுமார் 6 மணி நேரம் பயணித்த விண்கலம் மறுநாள் 12.10 மணியளவில் பூமியை வந்தடைந்தது.

இதனிடையே, 120 நாட்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை அனுப்ப நாசா திட்டமிட்டி வந்தது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க டிராகன் விண்கலம் இன்று புறப்பட்டது.

அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹியூஜ், ரஷிய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கொர்பனோவ் ஆகியோருடன் இந்த விண்கலம் புறப்பட்டு சென்றது. 4 இருக்கைகள் கொண்ட டிராகன் விண்கலத்தில் 2 இருக்கைகள் காலியாக அனுப்பப்பட்டுள்ளன. அந்த இருக்கைகளில் சுனிதாவும், வில்மோரும் பூமிக்கு திரும்பி வர உள்ளனர். டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பும் தேதி தொடர்பான விவரம் இதுவரை வெளியாகவில்லை.   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com