5 மாதங்களுக்கு பின்பு நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு; 90 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

லெபனானில் 5 மாதங்களுக்கு பின்பு நடந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் 90 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
5 மாதங்களுக்கு பின்பு நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு; 90 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
Published on

பெய்ரூட்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது.

இஸ்ரேல் தாக்குதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கியது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது.

இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி குண்டுமழை பொழிந்து கொன்றது. இதில், 80-க்கும் மேற்பட்ட குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த தாக்குதல் நடந்து பல மாதங்களானாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு நடைபெறாமல் தள்ளி போய் கொண்டே இருந்தது. இந்த சூழலில், 5 மாதங்களுக்கு பின்னர், லெபனானில் உள்ள மிக பெரிய விளையாட்டு திடலில் நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.

ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட தெற்கு புறநகர் பகுதிகளில், கேமில்லே சாமவுன் விளையாட்டு நகர திடலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஈரான் ஆதரவுடன், மத்திய கிழக்கு பகுதியில் 3 தசாப்தங்களாக சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட அவருடைய இறுதி சடங்கில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் கடும் குளிரிலும் நடந்தே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று கலந்து கொண்டனர்.

அவர்களின் கைகளில் ஹிஸ்புல்லா கொடிகளும், நஸ்ரல்லாவின் புகைப்படங்களும் காணப்பட்டன. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்காக 90 நாடுகளை சேர்ந்த மக்கள் லெபனானுக்கு வந்துள்ளனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து உள்ளது.

இதில், மைய பகுதியில் விளையாட்டு திடல் இருக்க, அதனை சுற்றியுள்ள தெருக்களில் இருந்து மக்கள் வரிசை, வரிசையாக நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. 50 ஆயிரம் பேர் பங்கேற்க கூடிய அந்த திடலில் மக்கள் அமர வசதியாக கூடுதல் இடங்களை ஹிஸ்புல்லா அமைப்பாளர்கள் செய்திருந்தனர். அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com