

வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க போர் துறைக்கான மந்திரி பீட் ஹெக்சேத் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, புதிய ஈரான் அரசு, இதற்கு முன்பு இருந்த அரசை விட அமெரிக்காவிடம் வேறுபட்ட வகையில் உரையாடி வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், பேச்சுவார்த்தையில் பலன் ஏற்பட்டு உள்ளது.
இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் நீடிக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து ராஜதந்திர முறையில் பேச்சுகளை தொடர இது மிக அவசியம் என்றார். செறிவூட்டிய யுரேனியம் எல்லாவற்றையும் ஈரான் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால், அமெரிக்கா அதனை எடுத்து கொள்ளும் என்றார்.
இதேபோன்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, ஈரானில் யுரேனிய செறிவூட்டல் ஒட்டுமொத்தத்தில் நிறுத்தப்பட வேண்டும். அதற்கேற்ப ஈரானுக்கான, தடை விதிப்பில் இருந்து நிவாரணம் அளிப்பது மற்றும் வரி குறைப்புகள் ஆகியவற்றுக்கான அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளையும் தொடங்கி இருக்கிறோம்.
ஈரானுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராகி வருகிறது என குறிப்பிட்ட டிரம்ப், விரிவான சர்வதேச அளவிலான தீர்வுக்கான அடித்தளமும் திறமையாக நிறுவப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.