

காத்மாண்டு,
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1,388 ஆக உயர்ந்துள்ளது.
இமயமலை பிராந்தியத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தை நாசமாக்கியது. கரைபுரண்டு பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகதியும் உள்கட்டமைப்புகளை முற்றிலும் சீரழித்தன.
நேபாளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மாயமாகி உள்ளனர்.
இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டவர்கள் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் இன்றைய நிலவரப்படி 1,388 பேரின் உடல் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றில் பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்து அடையாளம் காண முடியாத வகையில் உள்ளன. எனவே மரபணு சோதனை நடத்தப்பட்டு, மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
பேரிடரில் உயிர் விட்ட 1,300-க்கு மேற்பட்டோரின் உடல் மீட்கப்பட்டு உள்ள நிலையில், 4,898 பேரை இன்னும் காணவில்லை. இதில் தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்களும் அடங்குவர். இதற்கிடையே சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 11 நாட்கள் ஆகி விட்டன. இதனால் மாயமானவர்கள் பிழைத்திருக்கும் வாய்ப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 7,387 நேபாளிகள் மற்றும் 1,244 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 8,631 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, திரிசூலி 3 ஏ நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் மனித குரல்கள் கேட்பதை மீட்புப்படையினர் கேட்டனர். அவர்களுடன் தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தினர். நேபாள ராணுவத்தினரும், ஆயுத போலீஸ் படையினரும் மீட்புப்பணியைத் துரிதப்படுத்தினர். இதன் பலனாக, நேற்று அந்த சுரங்கத்தில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட 9 நாட்களுக்கு பிறகு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் கபிர் மகார்ஜன் (வயது 45), அந்த நீர்மின் திட்டத்தின் மெக்கானிக்கல் மேற்பார்வையாளர் என்றும், மற்றொருவர் சஞ்சய் சா (30), மேற்பார்வையாளர் என்றும் அடையாளம் காணப்பட்டது. காத்மாண்டு நகரில் உள்ள நேபாள ராணுவ ஆஸ்பத்திரியில் கபிர் மகார்ஜன் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. சஞ்சய் சா, நுவகோட்டில் உள்ள திரிசூலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சஞ்சய் சா, மாதேஷ் மாகாணம் சப்தாரி மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் மீட்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு படையினருடன் சிறிது நேரம் உரையாடினார். அவர் கூறுகையில், “விபத்து நடந்தபோது நான் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்தேன். ஒவ்வொருவர் உயிரையும் காப்பாற்றுவது என் பொறுப்பு. எனவே, சம்பவம் நடந்தவுடன், அங்கிருந்த அனைவரையும் ஓடுமாறு கூறினேன். அவர்கள் தப்பிவிட்டனர். ஆனால் நான் சிக்கிக்கொண்டேன்.
சுரங்கத்துக்குள் சிக்கி இருந்த 9 நாட்களும் 'ஹரே கிருஷ்ணா' மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தேன். அங்கு 3 அல்லது 4 பேர் சிக்கி இருந்தனர். அவர்களுடன் சத்தம் எழுப்பியும், உரையாடியும் தொடர்பை ஏற்படுத்தி இருந்தோம். பவர்ஹவுசை சுற்றி நிறைய பேர் சிக்கி இருக்கலாம். அவர்கள் தப்பி இருக்க முடியாது. வெள்ளத்தின் அழுத்தத்தால் அவர்கள் உள்ளே தள்ளப்பட்டு இருக்கலாம்” என்று கூறினார்.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கு பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து சீனா முதன்முறையாக உயிரிழப்பு மற்றும் பாதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தங்கள் தரப்பில் 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 531 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சீற்றத்தால் கியாரங் (Gyarang) நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், அங்குள்ள குடியேற்றத் துறை (immigration) அலுவலகக் கட்டடம் ஒன்றும் அழிந்தது. இச்சம்பவம் நடந்தபோது, கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள், வணிகப் பயணத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் சரக்குக் கொள்கலன் (container) வாகன ஓட்டுநர்கள் என சுமார் 2,500 முதல் 3,000 பேர் அப்பகுதியில் இருந்தனர்.
சீனப் பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; பேரிடர் நடந்த இடத்திலிருந்து மேலும் உடல்கள் மீட்கப்படும்போது, அதுகுறித்த கூடுதல் தகவல்களும் நிலவரங்களும் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.