நேபாள வெள்ளம்: 5,000-க்கும் மேற்பட்டோர் மாயம் - தொடரும் மீட்பு பணிகள்

மாயமானவர்களில் 589 பேர் இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள வெள்ளம்: 5,000-க்கும் மேற்பட்டோர் மாயம் - தொடரும் மீட்பு பணிகள்
Published on

காத்மாண்டு,

நேபாளத்தில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ள நிலையில், அதில் 589 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேபாள வெள்ளம்

இமயமலை பிராந்தியத்தில் நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகதியும் உள்கட்டமைப்புகளை முற்றிலும் சீரழித்தன.

நேபாளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். திரிசூலி 3ஏ என்ற நீர்மின் திட்ட சுரங்கப் பாதைக்குள் தடிமனான சேறு மற்றும் இடிபாடுகளுக்கு இடையே பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

மீட்புப் பணிகள்

இதனைத் தொடர்ந்து நேபாள ராணுவத்தினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 13,676 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

5,130 பேர் மாயம்

அதே சமயம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 5,130 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 589 பேர் இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் இருந்து உயிரற்ற உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. நேபாளத்தை உலுக்கிய இந்த வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐ நெருங்கியுள்ளது. இதுவரை 102 உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்படாத உடல்கள்

அதே சமயம், அடையாளம் காணப்படாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள், பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உரிய பரிசோதனைகளுக்கு பின்னர் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com