

காத்மண்டு,
இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் சமீப காலங்களாக இந்தியாவுடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிலையில், நாட்டின் சுதந்திர தினத்தினை முன்னிட்டு பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நமது அண்டை நாடான நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசினார். இது மரியாதை நிமித்தம் பிரதமர் மோடியுடன் பேசிய நேபாள பிரதமர் ஒலி, சுதந்திர தின வாழ்த்தகளை தெரிவித்து கொண்டார். இதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கொரோனா சூழ்நிலைகளை பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.
இதேபோன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களில் இந்தியாவுக்கான வங்காளதேச தூதர் முகமது இம்ரான் கலந்து கொண்டார். இரு நாடுகளிடையேயான உறவு வலுப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என அவர் கூறினார்.
இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் கூறும்பொழுது, இந்திய சுதந்திர தினத்தில் இந்திய அரசுக்கும் மற்றும் மக்களுக்கும் வாழ்த்துகள். பழமையான நாகரீக வளம் கொண்ட சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு பெரும் நாடுகளும் ஒன்றிணைந்து சமாதானத்துடன் செல்லவும் மற்றும் நெருங்கிய நட்புறவில் வளர்ச்சி காணவும் வேண்டும் என தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.