

காத்மண்டு,
நேபாளத்தில், பிரதமராக இருந்த சர்மா ஒலி தலைமையிலான இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புஷ்ப கமல் பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் சார்புடைய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும், 2017 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்தித்தன.
தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், சர்மா ஒலி பிரதமரானார். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு, இரு கட்சிகளும் இணைக்கப்பட்டு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரிடப்பட்டது.
இந்நிலையில் இந்த பெயர் மற்றும் அதனை பதிவு செய்த தேர்தல் ஆணையத்திற்கு எதிராக, ரிஷிராம் கட்டல் என்பவர், நேபாள உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் இதே பெயரில் ஏற்கனவே ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், புதிதாக இணைக்கப்பட்ட சர்மா ஒலி, புஷ்ப கமல் கட்சியின் பெயர் பதிவை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேபாள உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், மனுதாரர் ரிஷிராம் கட்டல், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதால், மற்றொரு கட்சி அதே பெயரை பதிவு செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
எனவே, சர்மா ஒலி மற்றும் புஷ்பகமல் ஆகியோரின் கட்சிகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் மீண்டும் கட்சிகளை இணைக்க விரும்பினால், தேர்தல் ஆணையத்தில் முறைப்படி விண்ணப்பித்து உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.