

ஜெருசலேம்,
ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. ஆனால் அமெரிக்கா அதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது.
இந்நிலையில் ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. பொதுச்சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 128 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்காவுக்கு ஆதரவாக வெறும் 9 நாடுகள் மட்டும் வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து ஐ.நா. சபை கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜெருசலேம் விவகாரத்தில் ஐநாவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து நேதன்யாகு கூறியதாக அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்றுக்கொள்ள முடியாத இந்த தீர்மானத்தை இஸ்ரேல் முற்றிலும் நிராகரிக்கிறது.
இஸ்ரேல் தான் எங்கள் தலைநகர். எப்போதும் இஸ்ரேலாகவே இருந்தது. இனியும் இருக்கும். டொனால்டு டிரம்ப் மற்றும் தூதர் நிக்கி ஹாலேவுக்கு நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.