உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை சீன ஆய்வகத்தில் உருவாக்கியதற்கான புதிய ஆதாரம்; அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் அம்பலம்

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை சீன ஆய்வகத்தில் உருவாக்கியதற்கான புதிய ஆதாரம் அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் அம்பலமாகி உள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை சீன ஆய்வகத்தில் உருவாக்கியதற்கான புதிய ஆதாரம்; அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் அம்பலம்
Published on

டிரம்ப் குற்றச்சாட்டு

உலகம் முழுவதும் 16 கோடிக்கு அதிகமானோரை பாதித்தும், 34 லட்சத்துக்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்டும் வெறியாட்டம் போட்டு வரும் கொரோனா இன்னும் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை. இந்தியாவிலும் கொரோனா 2-வது அலை காரணமாக மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர். வேகமாக பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த தேசமும் திண்டாடி வருகிறது. இப்படி உலக மக்களை பேரிடரில் தள்ளி, உலக பொருளாதாரத்தை சீரழித்து வரும் இந்த கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில் உள்ள சந்தை ஒன்றில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவியதாக சீனா கூறி வருகிறது.

ஆனால் உகானில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியதாகவும், சீனாதான் வேண்டுமென்றே இந்த வைரசை பரப்பியதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் இது தொடர்பாக சீனாவை உறுதியாக குற்றம் சாட்டி வந்தார்.

எனவே இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனத்தை உலக நாடுகள் வலியுறுத்தின. அதன்படி சர்வதேச நிபுணர் குழு ஒன்றை அமைத்த உலக சுகாதார நிறுவனம், அதை உகானுக்கு அனுப்பி ஆய்வு நடத்தியது. அந்த குழுவினரும் கடந்த மார்ச் மாதம் தங்கள் அறிக்கையை உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்தனர். இது குறித்து பின்னர் உலக சுகாதார நிறுவன இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறும்போது, இந்த அறிக்கை மிக முக்கியமான தொடக்கமேயன்றி, முடிவு அல்ல. வைரசின் தோற்றத்தை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பான ஆய்வுகளை நாங்கள் தொடர வேண்டும் என்று கூறியிருந்தார்.அதேநேரம் இந்த வைரஸ் தோற்றம் தொடர்பான அனைத்து கருதுகோள்கள் (ஆய்வகத்தில் தோற்றுவிக்கப்பட்டது உள்ளிட்ட) குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் கூறினார்.

அதன்படி உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு எடுக்கும் குழுவினர் இன்று கூடுகின்றனர். இதில் கொரோனாவின் தோற்றம் குறித்த விசாரணையின் அடுத்தகட்டம் குறித்து முடிவு எடுப்பார்கள் என தெரிகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கான புதிய ஆதாரம் ஒன்றை அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. இதை அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அதாவது, இந்த வைரஸ் பரவல் குறித்த தகவல்களை சீனா வெளியிடுவதற்கு முன்னரே, அதாவது 2019-ம் ஆண்டு நவம்பர் மாத்திலேயே இந்த ஆய்வகத்தில் பணியாற்றி வரும் பல ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தொற்று மற்றும் பிற பருவகால நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட 3 ஆய்வாளர்கள் ஆஸ்பத்திரி சிகிச்சையை நாடியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்துதான் பரவியிருக்கலாம் என்ற சர்வதேச சமூகத்தின் சந்தேகம் மேலும் வலுப்பெற்று உள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த தகவல் உலக நாடுகளை மேலும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com