

சமூக வலைத்தளங்களில் முன்னணி வகிக்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்தாத ஸ்மார்ட் போன் யூசர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ் அப் நிறுவனம் சந்தையில் போட்டியை சமாளிக்கவும் பயனர்களை தக்க வைக்கவும் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் பயனர்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில், இனி போன் நம்பர் இல்லாமல் யூசர் நேம் வைத்தே பயன்படுத்தலாம். பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் ஆக உள்ளது. இந்த வாரத்தில் இருந்தே பயனர்கள் விருப்பமான பெயர்களை முன்பதிவு செய்யலாம் என்றாலும், இந்த வருட இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் Settings > Account > Username வழியாக பெயரை ரிசர்வ் செய்யலாம். இந்த புதிய அம்சம் அறிமுகமான பிறகு, பயனர் பயனர்பெயர் (Username) வசதியை பயனர் பயன்படுத்தியிருந்தால், முதல் முறையாக யாராவது செய்தி அனுப்பும்போது பயனரின் தொலைபேசி எண் மற்றவர்களுக்கு தெரியாது. பயனர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வாட்ஸ்அப் கொண்டு வரவுள்ள புதிய அம்சமாக இது கருதப்படுகிறது.