இங்கிலாந்தில் இரண்டாவதாக புதிய கொரோனா வைரஸ் பரவல்: தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று

இங்கிலாந்தில் இரண்டாவதாக புதிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதன் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில், இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது.

இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அங்கு மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு பரிசோதித்ததில் கொரோனாவின் மற்றுமொரு புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது.

இதுவும் இங்கிலாந்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டது போலவே வீரியமாக பரவும் திறன் கொண்டதாக அறியப்படுகிறது. தென்ஆப்பிரிக்காவில் இது மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக இங்கிலாந்து சுகாதார மந்திரி மேத் ஹன்காக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடந்த வாரங்களில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களிடம்தான் இரு (கொரோனாவின் மாறுபட்ட வெளிப்பாடு) வைரஸ்களும் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த புதிய வைரஸ் மேலும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. ஏனெனில் இது மிகவும் வேகமாக பரவுவது மட்டுமின்றி, இங்கிலாந்தில் கண்டறியப்பட்டதை விட மேலும் பிறழ்வு கொண்டதாக தெரிகிறது எனவும் கூறினார்.

இந்த புதிய வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இங்கிலாந்தில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக தென்ஆப்பிரிக்காவுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு கட்டாய தனிமையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com