துனிஷியாவில் புதிய பிரதமர் நியமனம்; ஜனாதிபதி அறிவிப்பு

துனிஷிய நாட்டின் சமூக விவகார மந்திரி கமல் மதூரியை புதிய பிரதமராக, ஜனாதிபதி சயீத் நியமித்து உள்ளார்.
துனிஷியாவில் புதிய பிரதமர் நியமனம்; ஜனாதிபதி அறிவிப்பு
Published on

துனிஸ்,

துனிஷியா நாட்டின் பிரதமராக இருந்தவர் அகமது ஹச்சானி. அவரை அந்நாட்டின் ஜனாதிபதி கெய்ஸ் சயீத் பதவியில் இருந்து நீக்கினார். இந்நிலையில், அவருக்கு பதிலாக சமூக விவகார மந்திரி கமல் மதூரியை புதிய பிரதமராக, ஜனாதிபதி சயீத் நியமித்து உள்ளார்.

எனினும், இந்த முடிவில் வேறு விவரங்களை ஜனாதிபதி அலுவலகம் வெளியிடவில்லை. கடந்த மே மாதத்தில் அரசாங்கம் பகுதியளவு மாற்றியமைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டு மே 25-ந்தேதி சமூக விவகார துறை மந்திரியாக மதூரி நியமிக்கப்பட்டார்.

1974-ல் பிறந்தவரான மதூரி, அதற்கு முன் தேசிய சுகாதார காப்பீடு நிதியமைப்புக்கான தலைவராக பதவியில் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஹச்சானி பிரதமராக நியமிக்கப்பட்டார்.

வருகிற அக்டோபர் 6-ந்தேதி துனிஷியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. 5 ஆண்டு கால பதவிக்கான இந்த தேர்தலில் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக ஜனாதிபதி கெய்ஸ் சயீத் மீண்டும் போட்டியிடும் முடிவில் உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com