

வாஷிங்டன்,
நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி, அங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களுடன் இணைந்து ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கோலாகலமாக கொண்டாடினார்.
ரக்ஷா பந்தன் பண்டிகை தினமான நேற்று (வெள்ளிக்கிழமை) நியூயார்க்கில் உள்ள தெற்காசிய முதியோர்களுக்கான சமூக நல மையமான 'இந்தியா ஹோம்' என்ற இடத்திற்கு மேயர் ஜோஹ்ரான் மம்தானி நேரில் சென்றார். அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளி முதியவர்கள் மற்றும் பெண்கள், பாரம்பரிய முறைப்படி மேயரின் கைகளில் ராக்கி கயிறுகளைக் கட்டி, இனிப்புகளை வழங்கி தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) மேயர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ச்சியான செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"ரக்ஷா பந்தனின் ஒற்றை நூல் என்பது ஒருவருக்கொருவர் பாதுகாப்பு, ஆதரவு மற்றும் துணையாக நிற்பதற்கான சக்திவாய்ந்த வாக்குறுதியைக் குறிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதே சகோதரத்துவ உணர்வோடு நியூயார்க் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் துணையாக நின்று, பாதுகாப்பான மற்றும் அனைவரும் வாழக்கூடிய எளிய நகரமாக நியூயார்க்கை மாற்ற ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தனது செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். நியூயார்க் மேயர் இந்திய மக்களுடன் இணைந்து பண்டிகையைக் கொண்டாடிய இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன.