

வெலிங்டன்,
உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில், இதுவரை 1,122 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்புக்கப்பட்டனர். அதில் 19 பேர் மட்டுமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் 80 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால், அதன் சமூக தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாகவும் நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறிந்து தடுக்கப்பட்டுள்ளது. இன்று புதிதாக நோய்த்தொற்று எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் நியூசிலாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில், இன்று நள்ளிரவு முதல் சில தளர்வுகள் கொண்டுவர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கொரோனா வைரஸ் இல்லா நிலையை நியூசிலாந்து அடைந்துவிட்டதாக கூறுவது, நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றே இல்லை என்று அர்த்தம் கிடையாது. நோய்த்தொற்று பரவலின் அனைத்து மூலங்களையும் கண்டறிந்துவிட்டோம் என்று அர்த்தம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்பீல்ட் தெரிவித்துள்ளார்.