

வெல்லிங்டன்,
நியூசிலாந்தில் ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆறு சர்வதேச விமானங்களும் அடங்கும். நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லண்டு நகரத்தில் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதேபோல்,உயர் ரக எரிபொருள்களால் இயங்கும் கார்களின் இயக்கமும் தடைபட்டுள்ளது.
நியூசிலாந்தில் மிகப்பெரும் எரிபொருள் விநியோக நிறுவனமான இசட் எனர்ஜி நிறுவனத்தின் எரிபொருள் விநியோக குழாயில் சேதம் ஏற்பட்ட காரணத்தால், எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால், நியூசிலாந்து ராணுவம் சிங்கப்பூர் ராணுவத்துடன் இணைந்து மேற்கொள்ள இருந்த பயிற்சியை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. அரசு அதிகாரிகள் தேவையற்ற விமான பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோக குழாய் சீரமைக்கப்படும் வரை இந்த தட்டுப்பாடு நீடிக்கும் என்று நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
நியூசிலாந்தில் வரும் 23 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அரசுக்கு இந்த நிகழ்வு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உட்கட்டமைப்பு பிரச்சினையை தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு காரணம் என்று அந்நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.