நீரவ் மோடியின் காவல் ஆக.22 வரை நீட்டிப்பு

லண்டனில் சிறையில் உள்ள நீரவ் மோடியின் காவல் ஆக.22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீரவ் மோடியின் காவல் ஆக.22 வரை நீட்டிப்பு
Published on

லண்டன்,

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த நிரவ் மோடி, நெருக்கடி மிக்க லண்டன் சிறையில் கம்பி எண்ணி வருகிறார். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு மறுத்து விட்டது.

இந்த நிலையில், நிரவ் மோடி இன்று மீண்டும் வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிரவ் மோடியின் காவலை வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை மே 2020-ல் நடைபெறும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com