

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார்.
அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த 19-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
20-ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்றக்காவல் இன்று முடிந்தது. இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் வழங்க இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என இந்திய அதிகாரிகள் தரப்பு எதிர்த்தது. இதனையடுத்து அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் விசாரணையை ஏப்.26ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்திய விசாரணை பிரிவான அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐயும் விசாரணைக்காக லண்டனில் உள்ளது.