

சியோல்,
வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், கடுமையான ராணுவ நடவடிக்கைகளை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மாட்டீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சியோல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மட்டீஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த தகவலை தெரிவித்தார். ஜிம் மட்டீஸ் கூறியதாவது:- தவறு செய்யாதீர்கள், அமெரிக்கா மீதும் அதன் நட்பு நாடுகள் மீது ஏதாவது தாக்குதல் நடத்தினால், அது முறியடிக்கப்படும். அணு ஆயுதங்களை வடகொரியா பயன்படுத்தினால், கடுமையான ராணுவ நடவடிக்கைகள் மூலம் அது முறியடிக்கப்படும் என்றார்.
வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் தனது ஆறாவது அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியது. அமெரிக்காவின் பிரதான இடங்களை தாக்கும் வகையில் ஏவுகணை சோதனைகளை பலமுறை வடகொரியா நடத்தியுள்ளது. இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான வார்த்தை போர் முற்றியுள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.