பாகிஸ்தான் அதிபர் தேர்தல்; 3 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

பாகிஸ்தானில் 3 அதிபர் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று ஏற்று கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் தேர்தல்; 3 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் அதிபராக இருப்பவர் மம்னூன் உசைன். இவரது 5 வருட பதவி காலம் வருகிற செப்டம்பர் 9ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 4ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் ஆரீப் ஆல்வி, பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ஆஹ்சான் மற்றும் ஜமியத் உலமா இ இஸ்லாம் பஜல் தலைவர் மவுலானா ஆகியோர் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்.

கடந்த ஆகஸ்டு 25ந்தேதி முர்ரீ நகரில் நடந்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கான கூட்டத்தில், கூட்டு வேட்பாளர் ஒருவரை நியமிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து 3 வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் ஆணையம் இன்று ஏற்று கொண்டது. அவர்களது மனுக்களை தேர்தல் ஆணைய தலைவரான நீதிபதி (ஓய்வு) ரசா கான் ஆய்வு செய்துள்ளார்.

வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் இறுதி பட்டியல் நாளை வெளியாகும். வாக்கு பதிவு ரகசிய முறையில் நடைபெறும். வருகிற செப்டம்பர் 8ந்தேதி புதிய அதிபர் பொறுப்பேற்றிடுவார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com