

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில், அந்நாட்டின் அதிநவீன ‘சோய் ஹியோன்’ என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன. சுமார் 5 ஆயிரம் டன் எடையுள்ள இந்த பிரம்மாண்ட போர்க்கப்பலில் இருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட 2 அதிநவீன ‘குரூஸ்’ ஏவுகணைகளும், கப்பல்களைத் தாக்கி அழிக்கும் 3 ஏவுகணைகளும் ஏவப்பட்டன. குரூஸ் ஏவுகணைகள் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறந்து மேற்கு கடல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக வடகொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சோதனையை நேரில் பார்வையிட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தனது கடற்படையின் அணு ஆயுதத் திறனை எல்லையற்ற வகையில் விரிவாக்கம் செய்யப்போவதாகத் தெரிவித்தார். மேலும், தற்போது கட்டுமானத்தில் உள்ள 3 மற்றும் 4-வது போர் ரகக் கப்பல்களுக்கான ஆயுதத் திட்டங்களையும் அவர் ஆய்வு செய்தார். இந்த நவீன கப்பல்கள் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டிருக்கலாம் என்று தென்கொரிய ராணுவ நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். மேற்காசியாவில் நிலவும் போரால் போர் பதற்றம் சர்வதேச அளவில் அதிகரித்துள்ள நிலையில், வடகொரியா திடீரென இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.