வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை தொடர்கிறது; ஐ.நா. அறிக்கையில் தகவல்

வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை தொடர்கிறது என ஐ.நா. அறிக்கை தெரிவித்து உள்ளது.
வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை தொடர்கிறது; ஐ.நா. அறிக்கையில் தகவல்
Published on

பியாங்யாங்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்ததால் அந்த நாட்டின் மீது ஐ.நா. கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. சோதனை திட்டங்களுக்கு நிதியுதவியை கட்டுப்படுத்தும் வகையில் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. வடகொரியா அணு ஆயதங்களை கைவிட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் 3 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவை தோல்வியில் முடிந்தன. எனினும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் சோதனையை நிறுத்தி வைத்ததாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வடகொரியா அணு ஆயுத உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை கவனித்து வரும் ஐ.நா. நிபுணர் குழு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கை மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. ஏவுகணைகளில் பொருத்தும் வகையில் சிறிய ரக அணு ஆயுதக் கருவிகளை வட கொரியா தயார் செய்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடகொரியா இதுவரை நடத்தியுள்ள 6 அணு ஆயுத சோதனைகளின் விளைவாக இந்த சிறிய ரக அணு ஆயுத கருவி உருவாக்கப்பட்டுவருவது தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com