அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சி: ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும் - வடகொரியா வலியுறுத்தல்

அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சியினை ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வடகொரியா வலியுறுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சியோல்,

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் தென்கொரியா நாடானது அமெரிக்காவுடன் இணைந்து 10 நாள் கூட்டுப்போர் பயிற்சிகளை நடத்தி வருகிறது. அப்போது நீண்ட தூரத்தில் குண்டுகளை வீசுவது, போர் விமான பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றன.

இதனை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி வட கொரியா எதிர்த்து வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் `இந்த பயிற்சியானது தங்களது பாதுகாப்புக்காகவும், வடகொரியாவின் அணு ஆயுத பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிக்கவும் அவசியமானது' என கூறி வருகின்றன.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட்டு அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்த வேண்டும் என வடகொரியா வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் ஐ.நா.வுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து நடத்தும் போர் பயிற்சி பிராந்தியத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே ஐ.நா. இதில் தலையிட்டு உடனடியாக இந்த கூட்டுப்போர் பயிற்சிகளை நிறுத்த வேண்டும்" என கூறப்பட்டது. மேலும் இந்த பயிற்சிகள் குறித்து ஐ.நா. அமைதி காப்பது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் வடகொரியா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com