

பியாங்யாங்,
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும் நவீன போர்முறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய ஆயுதங்களை வரிசையாக சோதனை செய்து உலக நாடுகளை வடகொரியா அதிரவைத்துள்ளது.
அந்த வகையில் தற்போது 'கிளஸ்டர் பாம்' பொருத்தப்பட்ட புதிய வகை ஏவுகணையையும் வடகொரியா ஏவிச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை இலக்கைச் சென்றடைந்ததும், அதிலிருந்து நூற்றுக்கணக்கான குண்டுகள் சிதறி விழுந்து சுமார் 17 ஏக்கர் பரப்பளவை நொடிப் பொழுதில் சாம்பலாக்கிவிடும்.
இதுமட்டுமின்றி, மின் உற்பத்தி நிலையங்களைச் செயலிழக்கச் செய்யும் 'கார்பன்-பைபர்' குண்டுகள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளது. தென்கொரியாவின் மின் விநியோகக் கட்டமைப்புகளை முடக்கவே இத்தகைய ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.