

வடகொரியாவை எச்சரிக்கும் பொருட்டு அமெரிக்காவின் சக்தி வாய்ந்த போர் கப்பல்களில் ஒன்றான USS Ronald Reagan தென் கொரிய கடற்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தென் கொரிய ராணுவத்துடன் தொடர்ந்து கூட்டுப்பயிற்சியிலும் அமெரிக்க ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வடகொரிய தலைவர் கிம் ஜோங் வுன் மீது குறிவைத்து அமெரிக்கா கடல் சிறப்பு படையினரை களமிறக்கியுள்ளதாகவும், அவர்களுக்கு உதவியாக இங்கிலாந்தின் SAS களமிறங்கியுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், தென் கொரிய அமெரிக்க கூட்டுப்பயிற்சியை கிண்டலடித்த கிம் ஜோங் வுன், தென் கொரிய கைப்பாவை படைகளை வைத்துக் கொண்டு கொரியா தீபகற்பத்தை போர் சூழலுக்கு அமெரிக்கா இட்டுச் செல்கிறது என்றார்.
மட்டுமின்றி தங்கள் நாட்டுக்குள் ஊடுருவும் எவருக்கும் பரிதாபகரமான முடிவு காத்திருக்கிறது எனவும் எச்சரித்தார்.
அமெரிக்காவின் செயல்பாட்டை ஹிலாரி கிளின்டனும் எதிர்த்தது மட்டுமல்ல, பேச்சுவார்த்தையே தீர்வு எனவும் தெரிவித்திருந்தார்.
தற்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அதே கருத்தை வெளியிட்டு, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.