

வடகொரியாவில் அதன் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில் இரும்புத்திரை ஆட்சி நடந்து வருகிறது. கம்யூனிஸ்டு சித்தாந்தத்துடன் கூடிய ராணுவ ஆட்சிமுறையை பின்பற்றக்கூடிய இந்த நாட்டின் ராணுவ மந்திரியாக நோ குவாங் சோல் இருந்தார். அந்த நாட்டின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றான பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்த அவர் முன்னணி ராணுவ அதிகாரியும் அரசியல் தலைவராக செயல்பட்டுவந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அவர் பாதுகாப்பு மந்திரியாக பொறுப்பு வகித்தார்.
வடகொரியாவின் அதிநவீன ஏவுகணைகள், அணு ஆயுத திட்டங்கள் மற்றும் புதிய போர் ஆயுத அமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி பல லட்சம் வீரர்கள் கொண்ட மக்கள் ராணுவத்தை நிர்வகித்து வந்தார். 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் கிம் ஜாங் அன் மற்றும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோருக்கு இடையே நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் வடகொரிய பிரதிநிதிகள் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார்.
வடகொரியாவில் ராணுவ தலைமையை மாற்றியமைக்கும் நடவடிக்கை யின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி நோ குவாங் சோல், பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ராணுவ மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், பாதுகாப்பு மந்திரியாக இருந்த நோ குவாங் சோல், பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வெடிமருந்து தொழில் துறையின் முதலாவது துணை இயக்குனராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, கொரிய மக்கள் ராணுவத்தின் பொது அரசியல் பிரி வின் இயக்குனரான கிம் சோங் கி புதிய பாதுகாப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு ஆலோசகரான பாக் ஜோங் சோன், மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவராகவும், அரசியல் பிரிவு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.