

கான்பெரா,
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே உள்ள ஜீலாங் பகுதியில் அமைந்துள்ள 'விவா எனர்ஜி' எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நள்ளிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விண்ணைமுட்டும் அளவுக்கு எழும்பிய தீப்பிழம்புகளால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
சுமார் 13 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், நாட்டின் 10 சதவீத பெட்ரோல் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த ஆலையில் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் காரணமாக ஏற்கனவே உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த விபத்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் அமைந்துள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் மக்கள் முண்டியடிப்பதால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நிலைமையைச் சமாளிக்கச் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து கூடுதல் எரிபொருளை இறக்குமதி செய்ய ஆஸ்திரேலிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.