

வாஷிங்டன்,
ஒமைக்ரான் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் பரவல் குறித்து பல நாடுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானி அந்தோனி பாசி கூறுகையில்,
"தற்போது தென் ஆப்பிரிக்காவில் உருவாகி பல நாடுகளில் பரவி வரும் புதிய கொரோனா மாறுபாட்டான ஒமைக்ரான் வைரசானது வேகமாக மிக பரவக்கூடிய ஒன்றாகும். ஆனால் கொரோனாவின் முந்தைய மாறுபாடான டெல்டாவை விட தீவிரமானது அல்ல.
மேலும், அதிகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தாது. நோயாளிகள் மருத்துவமனையில் அதிகமாக அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இறப்புகள் அதிகமாக இருக்காது" என்று அவர் கூறினார்.