கவுதமாலாவில் 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்; சிறுவன் உள்பட 4 பேர் மரணம்

கவுதமாலாவில் நிலநடுக்கத்திற்கு, 4 பேர் வரை பலியாகி உள்ளனர் என அந்நாட்டு ஜனாதிபதி பெர்னார்டோ ஆரிவாலோ உறுதிப்படுத்தி உள்ளார்.
கவுதமாலா சிட்டி,
கவுதமாலாவில் அடுத்தடுத்து 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. அது, கடந்த செவ்வாய் கிழமை மதியத்தில் இருந்து, ரிக்டர் அளவுகோலில் 3.0 முதல் 5.7 ஆக பதிவாகி இருந்தது.
இதில், 4 பேர் வரை பலியாகி உள்ளனர். இதனை அந்நாட்டு ஜனாதிபதி பெர்னார்டோ ஆரிவாலோ உறுதிப்படுத்தி உள்ளார். இதில், செல்ல நாயுடன் பெண் ஒருவர் உடல் புதைந்து கிடந்துள்ளது. 13 வயது சிறுவனின் உடல் ஒன்றும் நேற்று மீட்கப்பட்டது. இதுதவிர, எஸ்குவின்ட்லா பகுதியில் லாரியில் சென்றபோது, பாறைகள் சரிந்து விழுந்ததில் 2 ஆண்கள் பலியாகி இருந்தனர்.
தொடர் நிலநடுக்கங்களால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வந்த மக்கள் குடும்பத்துடன் தெருக்களில் சென்று இரவில் படுத்து தூங்கியுள்ளனர். நிலநடுக்கங்களால் கட்டிடங்கள், நிலச்சரிவுகள் மற்றும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி சென்றுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.






