இலங்கை வடக்கு மாகாணத்தில் கன மழையால் வெள்ளம், 45 ஆயிரம் பேர் பாதிப்பு

இலங்கை வடக்கு மாகாணத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் கன மழையால் வெள்ளம், 45 ஆயிரம் பேர் பாதிப்பு
Published on

கொழும்பு,

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த ஐந்து மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாங்குளம், இரணைமடு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் நிரம்பி வழிகின்றன.வெள்ளப்பெருக்கால், முல்லைத் தீவுக்குச் செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களில் 14 ஆயிரம் குடும்பங்களைச்சேர்ந்த சேர்ந்த 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களில், 8 ஆயிரத்து 539 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 52 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 400 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் நீரால் நிரம்பி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் 212 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com