நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியுள்ளது.
நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். 67 வயது நிறைந்த இவர் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவரது பதவியை பறிக்குமாறு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து கடந்த ஜூலை மாதம் 28ந் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார்.

மேலும், நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் ஓய்வு பெற்ற கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை அமைப்பு ஊழல் வழக்குகள் தொடுத்து, அந்த வழக்குகளின் விசாரணையை பொறுப்புடைமை கோர்ட்டு 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியது.

வழக்கு விசாரணையில் இருந்து நவம்பர் 27ந்தேதி வரை தனக்கு விலக்களிக்க வேண்டும் என ஷெரீப் விடுத்த கோரிக்கை கடந்த வாரம் ஏற்கப்பட்டது. எனினும், தனது திட்டத்தில் மாற்றம் செய்த அவர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் தனது குடும்பத்தினருடன் பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று ஆஜரானார்.

வழக்குகளில் குற்றவாளி என ஷெரீப் அறிவிக்கப்பட்டால் சிறையில் அவர் அடைக்கப்படுவார். அரசியல் பழிவாங்கல் அடிப்படையில் வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com