

இஸ்லமபாத்,
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தான் மென்மையான போக்கை கையாண்டு வருகிறது.
ஜமாத் உத் அவா ஒரு தீவிரவாத அமைப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் ஏற்கெனவே பிரகடனம் செய்தன. இதன் அடிப்படையில்தான் ஹபீஸ் சயீத்தின் அமைப்பு மீது தடை விதிக்கப்பட்டது.
ஹபீஸ் சயீத்தைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை ஹபீஸ் சயீத்துக்கு வேறு வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விதித்தது.தற்போது லாகூரில் உள்ள சிறையில் ஹபீஸ் சயீத் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஹபீஸ் சயீத்தின் உதவியாளர்களான முகம்மது அஷ்ரப் மற்றும் லுகமன் ஷா ஆகிய இருவருக்கும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்த குற்றச்சாட்டில் , முறையே ஆறு மற்றும் ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.