

இஸ்லாமாபாத்,
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் போர் விமானங்களும் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைய முயன்றன.
இந்திய போர் விமானங்கள் உடனடியாக தீவிரமாக செயல்பட்டு பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடித்தன. இருநாட்டு வான்பகுதியில் ஏற்பட்ட இந்த மோதலின் போது, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் வாகா எல்லை வழியாக இந்தியாவிடம் ஒப்படைத்தது.
மேற்கூறிய மோதலால், இந்தியா - பாகிஸ்தான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றம் அதிகரித்தது. போர் மூளுமோ என அஞ்சும் அளவுக்கு இரு நாடுகளின் மோதல் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில், பாகிஸ்தான் தனது வான் எல்லையை கடந்த புதன் கிழமை மூடியது. இதனால், வான்வழி பயணங்கள் மேற்கொள்ள முடியாததால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் முழுவதும் வான்பரப்பு விமானபோக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக சிவில் போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் பாகிஸ்தான் வான்பரப்பு விமான போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.