இந்தியாவுடன் பாகிஸ்தான் அமைதியான உறவை விரும்புகிறது புதிய பிரதமர் ஷபாஸ் செரீப்

இந்தியாவுடன் பாகிஸ்தான் அமைதியான உறவை விரும்புகிறது என்று பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த புதிய பிரதமர் ஷபாஸ் செரீப் கூறி உள்ளார்
Image Courtesy: AP
Image Courtesy: AP
Published on

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் செரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட ஷபாஸ் செரீப் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஸ் செரீப்பிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஸ் செரீப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதம் இல்லாத, அமைதியான, நிலைத்தன்மை கொண்ட பிராந்தியத்தை இந்தியா விரும்புகிறது. ஆகையால், நமது வளர்ச்சிக்கான சவால்களை கவனத்தில் கொண்டு நமது மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வளர்ச்சியை உறுதிபடுத்துவோம் என தெரிவித்து இருந்தார்.

இதற்கு டுவிட்டர் மூலம் செரீப் கூறி இருப்பதாவது:-

வாழ்த்துக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது.

இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியைப் பாதுகாக்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் நன்கு அறியப்பட்டவை. அமைதியைப் பாதுகாப்போம் மற்றும் நமது மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவோம், என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷபாஸ் செரீப் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com