

ரமல்லா,
பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீன நாட்டுக்கு இன்று சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் மகமூத் அப்பாசை சந்தித்து பேசினார்.
இரு நாட்டு தலைவர்களின் இருதரப்பு சந்திப்பில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த சந்திப்பிற்கு பின்னர் பாலஸ்தீன நாட்டின் உயரிய கிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் இதனை வழங்கினார்.
இந்த விருதினை பெற்று கொண்ட பின் பிரதமர் மோடி பேசும்பொழுது, பாலஸ்தீனம் இந்தியாவுக்கு மரியாதை செலுத்தியுள்ளது. இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் எனக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது. பாலஸ்தீனத்துடனான நட்பின் அடையாளம் இந்த விருது என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், இந்திய வெளியுறவு கொள்கையில் பாலஸ்தீனத்திற்கு எப்பொழுதும் உயரிய இடம் வழங்கப்பட்டு உள்ளது. பாலஸ்தீனம் விரைவில் அமைதியான முறையில் சுதந்திர நாடாகி விடும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான உறவுகள் நீண்ட காலம் வரை நிலைத்து நின்றுள்ளது. இந்திய மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே இந்த வருடம் மாணவர்கள் பரிமாற்றம் 50ல் இருந்து 100 ஆக இரட்டிக்கப்படும். துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக பாலஸ்தீன மக்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய பிரதமர் ஆவார்.