

பிரபல சமூக வலைத்தள செயலியான இன்ஸ்டாகிராம் இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. இன்றைய ஜென்சி கிட்ஸ்கள் பலரும் எந்நேரமும் இன்ஸ்டாவில் மூழ்கி கிடக்கிறார்கள். இன்ஸ்டாகிராமை அதிகம் இளம் வயதினர், குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தினர் பயன்படுத்துவதால், அவர்களின் நலன் கருதி மெட்டா நிறுவனம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, தற்கொலை அல்லது தன்னைத் தானே காயப்படுத்துதல் தொடர்பான தகவல்களை அடிக்கடி அல்லது தொடர்ந்து தேடும் இளைஞர்களைப் பற்றி, அவர்களது பெற்றோருக்கு அறிவிப்புகளை இன்ஸ்டாகிராம் அனுப்பும். பெற்றோர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த புதிய அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய அம்சம் எப்படி செயல்படும் என்றால், இன்ஸ்டாகிராமின் கண்காணிப்பு திட்டத்தில் பெற்றோர்களும் டீன் ஏஜ் இளைஞர்களும் இணைக்கப்படுவார்கள். இது குறித்த தகவல் முன்கூட்டியே வழங்கப்படும். பதின்ம வயதினர் தற்கொலை அல்லது தன்னைத் தானே காயப்படுத்துவதை ஊக்குவிக்கும் சொற்கள் போன்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தேட முயற்சி செய்தால், அதுகுறித்த தகவல் பெற்றோருக்கு அறிவிக்கப்படும். மின்னஞ்சல், வாட்ஸ்அப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்படும். பிள்ளைகள் என்ன தேடியுள்ளனர் என்ற முழு விவரமும், இது குறித்து அவர்களிடம் எப்படி பேசுவது என்பது குறித்த நிபுணர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
வரும் வாரங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பிற பகுதிகளுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.