

ஜெனீவா
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரானில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
இதனால் மேற்காசிய பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், வான், கடல் வழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன.
ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் தன்வசம் வைத்துள்ளது. நட்பு பாராட்டும் நாடுகள் தவிர்த்து பிற நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என கூறி வருகிறது. அதனை மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்பட கூடிய நிலை காணப்படுகிறது. இதற்கு ஈரான் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால், பதற்றம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் இன்று வெளியிட்ட செய்தியில், மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டு வரும் போர் முக்கிய கட்டத்திற்கு சென்றுள்ளது. ஈரானில் உள்ள நடான்ஸ் அணு செறிவு வளாகம் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதேபோன்று, இஸ்ரேலில் அணு சக்தி தளம் அமைந்த திமோனா நகரம் மீது மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் அணுசக்தி தளங்கள் அருகே நடந்துள்ள தாக்குதலால் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் அதிகரித்து உள்ளது என்று அவர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.