

மணிலா,
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் 2-வது பெரிய தீவான மின்டனாவ் தீவை நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தவோ நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி பலியானாள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் அந்த நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே தனது குடும்பத்துடன் உயிர் தப்பினார். இந்த நிலையில் நிலநடுக்கத்தின் போது மின்டனாவ் தீவின் படாடா நகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் இடிந்து தரைமட்டமானதும், கட்டிடஇடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. அவர்களது உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதன் மூலம் நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 7 ஆனது.
இன்னும் சில இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து கிடப்பதாகவும், அவற்றின் இடிபாடுகளுக்குள் ஆட்கள் சிக்கியிருக்கக்கூடும் என நம்பப்படுவதாகவும் மீட்பு குழுவினர் கூறுகின்றனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.