படகுகள் மீது சீன கடற்படையினர் தாக்குதல்: பிலிப்பைன்ஸ் ராணுவம் கடும் கண்டனம்

பிலிப்பைன்சின் கடல்சார் நடவடிக்கைகளில் சீனா தலையிடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
படகுகள் மீது சீன கடற்படையினர் தாக்குதல்: பிலிப்பைன்ஸ் ராணுவம் கடும் கண்டனம்
Published on

மணிலா,

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீன கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் அந்த பகுதிக்கு உரிமை கோருகின்றன. இதனால் அந்த பகுதிக்கு செல்லும் பிலிப்பைன்ஸ் நாட்டின் படகுகள் மீது சீன கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்தநிலையில் சர்ச்சைக்குரிய தாமஸ் ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான படகு ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்காக சில படகுகள் அங்கு சென்றன. ஆனால் அந்த படகுகள் மீது சீன கடற்படையினர் தண்ணீர் பீரங்கி குண்டுகளால் தாக்கினர். இதில் 3 படகுகள் கடுமையான சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிலிப்பைன்ஸ் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து விளக்கம் அளிக்க சீன தூதரை வரவழைத்துள்ளதாக பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பிலிப்பைன்சின் கடல்சார் நடவடிக்கைகளில் சீனா தலையிடுவதாகவும், பிராந்திய ஸ்திரத்தன்மையை குறைவாக மதிப்பிடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதேசமயம் இதுகுறித்து சீனா தரப்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com