

வாஷிங்டன் டி.சி.
ஈரான் மீது அமெரிக்கா நடத்த இருந்த தாக்குதல் ரத்து செய்யப்படுகிறது என டிரம்ப் அறிவித்து உள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் இணைந்து, வான்வெளி தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டார். தொடர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதன் ஒரு பகுதியாக ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.
இந்த நிலையில், ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து, ஈரான் மீது இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்தும்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
ஈரானை தங்களிடம் சரண் அடைய வைக்கும் நோக்கில் இந்த ராணுவ நடவடிக்கை இருக்கும் என கூறப்பட்டது. இதனால், மேற்காசிய பகுதிகளில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளான மின்சார நிலையங்கள், பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஈரான் மீது நடத்த இருந்த தாக்குதல் ரத்து செய்யப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என டிரம்ப் அறிவித்து உள்ளார். இதனால், ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இதனால், உடனடியாக, ஒட்டுமொத்த அளவில் ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்படுவதுடன், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலும் முடிவுக்கு வரும் என்று உறுதியாக கூறினார். எங்களுடன், இந்த போர் நிறுத்தத்தில் இஸ்ரேல் நாடும் இணைந்துள்ளது என்றார். இதனால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.