கனடாவிலும் காலை உணவு திட்டம் அறிமுகம்

கனடாவில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு தேசிய உணவுத்திட்டத்தை இன்று அறிமுகம் செய்து வைப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கனடாவிலும் காலை உணவு திட்டம் அறிமுகம்
Published on

ஒட்டாவா,

பள்ளிக்கு காலை நேரத்தில் செல்லும் குழந்தைகள் பெரும்பாலானவர்கள் காலை உணவை தவிர்ப்பதை தடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி துவக்க பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது.

இந்த காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் வரவேற்பு பெற்ற நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தநிலையில், கனடா நாட்டில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இன்று (2.4.2024) "கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com