2 நாட்கள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு

அங்கு நடைபெறும் 15வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
டோக்கியோ,
2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டார். ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கிறார். இதனை தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இந்த மாநாட்டின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 31ம் தேதி சீனா செல்கிறார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பல்வேறு தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
அமெரிக்காவுடன் வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
டோக்கியோவில் தரையிறங்கினேன். இந்தியாவும், ஜப்பானும் தங்கள் வளர்ச்சி ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், இந்தப் பயணத்தின் போது பிரதமர் இஷிபா மற்றும் பலரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது ஏற்கனவே உள்ள கூட்டாண்மைகளை ஆழப்படுத்தவும், ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராயவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






