ஜப்பான், சீனா சுற்றுப்பயணம் நிறைவு; இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் ரஷியா, சீனா அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
பீஜிங்,
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றார். அங்கு டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பானதாக உருவாக்கும் என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தொடர்ந்து ஜப்பானில் உள்ள சுமார் 16 மாகாணங்களின் கவர்னர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்கள் இடையிலான கூட்டு ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து சீனா புறப்பட்டுச் சென்றார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். மாநாட்டிற்கு இடையே ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசி கலந்துரையாடினர். மாநாட்டிற்கு பிறகு ரஷிய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் ஒரே காரில் பயணித்தனர். பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருந்த நாடுகள் குறித்தும் பேசினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் முன்னிலையிலேயே பிரதமர் மோடி இந்த கருத்துகளை முன்வைத்தார்.
சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது.
இந்நிலையில், இன்று ரஷியா, இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, உக்ரைன் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். தியான்ஜின் விமான நிலையத்தில் சீன அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.






