

ஜெருசலேம்,
பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.
அதன்பின்னர் நேற்று மாலை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த உரைக்குப்பின் பிரதமர் மோடிக்கு 'நெசெட் சபாநாயகர்' பதக்கம் வழங்கப்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இதனை வழங்கினார்.
இதன் மூலம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்த உயரிய பதக்கம் பெறும் முதலாவது இந்திய பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் ஆகிய பெருமைகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார். தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள யாத் வஷேம் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி சென்றார்.
யாத் வஷேம் என்பது 2-ம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக ஜெருசலேமில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் ஆகும். அந்த நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்சாக்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்த உறுதுணையாக இருப்பதற்காக அதிபர் ஈசாக்கிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும் விரைவில் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என்றும், அவ்வாறு வரும்போது டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் மற்ற பகுதிகளையும் சுற்றிப்பார்க்க வேண்டும் எனவும் இஸ்ரேல் அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
இதே போல் இஸ்ரேல் அதிபர் கூறுகையில், மத்திய கிழக்கிற்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இஸ்ரேல் இடையிலான கல்வி, வேலைவாய்ப்பு, புத்தாக்கம், தொலை தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். தொடர்ந்து, இஸ்ரேல் அதிபர் அலுவலகத்தில் உள்ள தோட்டத்தில் பிரதமர் மோடி மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.