

ஒசாகா,
14 வது ஜி 20 உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் வரும் 28 ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, இன்று அதிகாலை ஒசாகா நகரம் சென்றடைந்தார். ஒசாகா வந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருப்பதாக பிரதமர் மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் ஒசாகா நகர் வந்தடைந்தார். பிரதமர் மோடியை ஷின்சோ அபே சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிகிறது.