தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் : நமல் ராஜபக்சே

தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் : நமல் ராஜபக்சே
Published on

கொழும்பு,

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை.

எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே இலங்கையின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட போது பல நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக பாரத பிரதமர் உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர்.

தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக, எமது நாட்டில் உள்ள தமிழ் மக்களின் மீது அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிக்கும் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பா.ம.க. தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளை கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை தவிர அவற்றில் வேறேதும் இல்லை.

எமது ஜனாதிபதி உள்பட அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நல்லெண்ணத்துடனும் செயல்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டுவிட்டு நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சாலச்சிறந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com