

பலுசிஸ்தான்,
பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த இயற்கை வளங்கள் நிறைந்த பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இதன் பெரும் பகுதி மக்கள் பாகிஸ்தான் நாட்டிற்குட்பட்ட பகுதியில் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் ஒரு பகுதி மக்கள் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவம் இங்கு வசிக்கும் மக்களை கடத்தி, கொலை செய்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. இதனால், ராணுவ அடக்குமுறைக்கு எதிராக பலுசிஸ்தானில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக நீடிக்கும் ராணுவ ஊடுருவலை எதிர்க்கும் பலூச் அரசியல் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலுசிஸ்தானில் சிபி நகர் அருகே சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது. தந்தூரி என்ற பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்ற லாரி ஒன்று சிக்கியுள்ளது.
இதில் 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 5 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை சிபி நகர துணை ஆணையாளர் சையது ஜாகித் ஷா உறுதிப்படுத்தி உள்ளார். இது சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு என அவர் கூறியுள்ளார்.
இந்த தொழிலாளர்கள் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தந்தூரி பகுதியில் நீர் குழாய் இணைப்பு திட்டம் ஒன்றிற்காக சென்று கொண்டு இருந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஒருவரும் பொறுப்பேற்கவில்லை.